வால்பாறை;வால்பாறையில் தேயிலை செடிகளை தாக்கும் கொசு நோய்த்தாக்குதலால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.வால்பாறையில், 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம், ெஹக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், பருவமழைக்கு பின் தேயிலை செடிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையில், துளிர்விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பலான எஸ்டேட்களில் தண்ணீர் தெளிப்பான்கள் வாயிலாக தேயிலைக்கு தண்ணீர் தெளிக்கப்படுகிறது. வால்பாறையில் வறட்சியான வானிலை நிலவும் நிலையில் தேயிலை செடிகளை ஒரு வகையான கொசு தாக்குதலால், செடிகள் துளிர்விட முடியாமல் பட்டுபோய்விடுகிறது. இதை தடுக்க எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் தேயிலை செடிகளுக்கு மத்தியில், மஞ்சள் நிற அட்டையில், ஒரு வித பசை பூசி வைக்கப்பட்டுள்ளது. தேயிலை தாக்க வரும் கொசுக்கள் இந்த அட்டையில் சிக்கி வெளியில் செல்ல முடியாமல் தவிக்கும். தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'கொசு தாக்குதலில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, 'உபாசி' தேயிலை ஆராய்ச்சியாளர்களின் அறிவுரையின் படி, மஞ்சள் நிற அட்டையில் பசை தடவப்பட்டுள்ளது. 'தேயிலை செடிகளை தாக்க வரும் கொசு இந்த பசையில் ஒட்டிக்கொள்ளும். மேலும் செடிகளை கொசுவின் பிடியிலிருந்து பாதுகாக்க தேயிலைசெடிகளை சுற்றிலும் துணியால் வேலி அமைத்து பாதுகாத்து வருகிறோம்,' என்றனர்.