கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியிலிருந்து, சந்தூர் ஏரி வரை வாய்க்கால் அமைக்க, நிலம் கொடுத்த விவசாயிகள், இழப்பீடு கேட்டு, 150வது முறையாக மனு அனுப்பினர்.
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையின் இடதுபுற வாய்க்கால் வழியாக செல்லும், உபரி நீர் பாளேகுளி ஏரி சென்றடைகிறது. அங்கிருந்து சந்தூர் வரையுள்ள, 28 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வகையில், 2012ல் வாய்க்கால் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, 700 குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கு உரிய இழப்பீடு கேட்டு, மாவட்ட நிர்வாகம், முதல்வர், தலைமை பொறியாளர், தாசில்தார் என, பல அதிகாரிகளுக்கு, விவசாயிகள் தொடர்ந்து, 149 முறை கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, 150வது முறையாக மின்னஞ்சல் மூலம், கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, பாளேகுளி - சந்தூர் ஏரி இடதுபுற வாய்க்கால் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு கூறியதாவது: வாய்க்கால் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்கக்கோரி, ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், தலைமை பொறியாளர், மாவட்ட நிர்வாகம், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு, தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகிறோம். நாங்கள் அளிக்கும் மனுக்கள், நில நிர்வாக ஆணையருக்கு, முன்மொழிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற பதில் மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் கோரிக்கை, கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல், வாய்க்கால் அமைக்க, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, தமிழக முதல்வர் இழப்பீடு வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.