ஓசூர்:ஓசூரில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த, ஏழு பேருக்கு, 10 நாட்கள் போலீஸ் 'கஸ்டடி' வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில், 22ம் தேதி, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 கிலோ நகைகளை வடமாநில கும்பல் கொள்ளை அடித்தது. அக்கும்பலை சேர்ந்த ஏழு பேரை, தெலுங்கானா மாநிலம், சைபராபாத் போலீசார் கைது செய்தனர்.அவர்களை அழைத்து வந்த, கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசார், நேற்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பறிமுதல் செய்த, 25 கிலோ நகைகள், 93 ஆயிரம் ரூபாய், ஏழு துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.கொள்ளையர்களிடம் விசாரணை நடத்த, 12 நாள் கஸ்டடி கேட்டு, போலீசார் மனு செய்தனர். நீதிபதி தாமோதரன், 10 நாள் வழங்கி உத்தரவிட்டார். கொள்ளையர்களை, போலீசார் அழைத்து சென்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பிரகதி நகர், கோனேரிபள்ளி அக்ரஹாரத்தில், இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து, கொள்ளை கும்பல் சதித்திட்டம் தீட்டியுள்ளது.அங்கு, அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்கவும், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி என, முத்துாட் நிறுவனத்தில், நடித்து காட்ட வைக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.