அந்தியூர்: தொழிலாளியை தாக்கிய கும்பலை, கைது செய்யக்கோரி, அந்தியூர் அருகே, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் அருகேயுள்ள தாசலியூரை சேர்ந்தவர் தினேஷ், 27; செங்கல் சூளை தொழிலாளி. இவரின் சகோதரர்கள் சிவா, 22, கார்த்தி, 20; சிவாவுக்கும், அதே பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் என்பவருக்கும், முன்விரோதம் உள்ளது. சிவாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், கடந்த, 25ம் தேதி மாலை, டூவீலரில் அவரை மருத்துவமனைக்கு தினேஷ் அழைத்துச் சென்றார். மகன்களுடன் தாயாரும் சென்றார். சிகிச்சை முடிந்து மூவரும் இரவில் வீடு திரும்பினர். தாசளியூர் பிரிவு பகுதியில் சஞ்சய், அவரது உறவினர்கள், டூவீலரை தடுத்து சிவாவை தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிவாவை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்தியூர் - கோபி சாலையில், நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். பவானி டி.எஸ்.பி., கார்த்திகேயன், அந்தியூர் போலீசார், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதனால் மறியலை கைவிட்டனர். மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.