கிருஷ்ணகிரி: திருவள்ளூர் அருகே, கூல்டிரிங்க்ஸ் குடித்த இருவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கினர். இதையடுத்து, கிருஷ்ணகிரியிலுள்ள தயாரிப்பு ஆலையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் அருகே, கடையில் கூல்டிரிங்ஸ் குடித்த இருவர், நேற்று முன்தினம் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினர். குளிர்பானம் தயாரிப்பு இடம் கிருஷ்ணகிரி மாவட்டம், சப்பானிப்பட்டி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி கலெக்டர் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில், நாகேஸ்வரன், சுரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் சப்பானிப்பட்டி அருகே உள்ள ஆலையில் தயாரிக்கப்படும் மூன்று வகையான குளிர்பான பாட்டில்களை சென்னை, கிண்டியிலுள்ள அரசு பகுப்பாய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'சப்பானிப்பட்டி அருகே உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலை, மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலுள்ள இவர்களது குளிர்பான நிறுவனம் மற்றும் அங்கிருந்து அனுப்பப்பட்ட, திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் சோதனை நடக்கிறது. அங்கு குளிர்பானங்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகள் வரும் வரை குளிர்பான ஆலையில் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.