ஸ்ரீபெரும்புதுார் : ஒரகடம் அருகே, ஏரிக்கரை பகுதியில் விளையாட சென்ற, மூன்று வயது குழந்தை, ஏரியில் மூழ்கி உயிர் இழந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த, வலையகரணை ஊராட்சி ஊமையாள்பரணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 35. வாலாஜாபாத் அருகே, குன்னவாக்கத்தில் உள்ள தனியார் கிரஷர் மேலாளர். இவரது மகள் பிரிதியுக் ஷா,3.வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில், நேற்று முன்தினம் விளையாட சென்ற குழந்தை மாயமானது. இதுகுறித்து, ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழந்தை ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஏரியில் மிதந்த குழந்தை பிரிதியுக் ஷாவின் உடலை, ஒரகடம் போலீசார் நேற்று மீட்டனர். பின், பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.