திருப்பூர்: தமிழகத்தில், 20 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகளுக்கு, சூரிய ஒளி மின் சக்தி கட்டமைப்பை நிறுவ, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இலவச விவசாய மின் இணைப்பு மோட்டார்களுக்கு, 60 சதவீத மானியத்துடன், சோலார் (சூரிய ஒளி மின்சக்தி) கட்டமைப்பு உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இலவச விவசாய இணைப்பில், 7.50 ஹெச்.பி., திறனுக்கும் குறைவான மோட்டாரை இயக்கும் விவசாயிகள், கூடுதலாக சோலார் கட்டமைப்பை உருவாக்கலாம்.உற்பத்தி செய்து, பயன்படுத்தியது போக, எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கு வழங்கி, விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம்.
ஆண்டுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:இலவச விவசாய இணைப்பு வைத்துள்ள விவசாயிகள், 11 கிலோ வாட் திறனுள்ள சோலார் கட்டமைப்பு அமைக்க, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். 60 சதவீதம், மத்திய, மாநில அரசுகளின் மானியமாக கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில், மின் வருவாய் மூலம், செலவை ஈடுகட்ட முடியும்.பயன்பாடு போக, சோலார் மூலம் கிடைத்த மின்சாரத்துக்கான தொகையை, மின்வாரியம் விவசாயிகளுக்கு வழங்கும். யூனிட்டுக்கு, 2.28 ரூபாய் கட்டணம் வழங்கப்படும். தமிழகத்தில், 20 ஆயிரம் சோலார் பேனல்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.