கரூர்: சின்னதாராபுரம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், க.பரமத்தி யூனியன் பகுதியில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மின்வாரிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த சின்னதாராபுரம், கரூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில், பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாததால் சாலையோரம் மணிக்கணக்கில், பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். காலை, 7:00 முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரையிலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் பகுதிவாசிகள் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, சின்னதாராபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.