அவிநாசி: அவிநாசி அருகே, கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்ட இடத்தில், மீண்டும் பட்டா வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்கள், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.இதில், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், தெக்க லுார், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 40 பயனாளிகளுக்கு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், பட்டா வழங்கப்பட்டது.பட்டா பெற்றவர்களுக்கு, தெக்கலுார் ஊராட்சி, ஏரிப்பாளையத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. பட்டா பெற்றவர்கள் அந்த இடத்துக்கு சென்று குடிசை அமைக்க முயன்ற போது, 'அதே பகுதியில் வசிக்கும் சிலர், இந்த இடம் ஏற்கனவே எங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது' எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, பட்டா பெற்றவர்கள், தாசில்தார் ராகவியிடம் புகார் தெரிவித்தனர். அதேநேரம், ஏற்கனவே, அந்த இடத்தில் பட்டா பெற்றதாக கூறியவர்களும், தங்களிடம் உள்ள ஆவணங்களுடன், தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இப்பிரச்னை குறித்து, தாசில்தார் ராகவி கூறியதாவது:தெக்கலுார் - ஏரிப்பாளையத்தில், பட்டா பெற்றவர்கள் அங்கு குடிசை அமைக்க செல்லும் போதுதான், அந்த இடத்தில், ஏற்கனவே சிலர் பட்டா பெற்றுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. விசாரணையில், 2004ல் சிலருக்கு பட்டா வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா பெற்ற இடத்தில், பட்டா பெற்று, 6 மாதங்களுக்குள் வீடு கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும். தவறும்பட்சத்தில், பட்டா செல்லாததாக மாறி விடும். கடந்த, 2004ல், பட்டா பெற்றவர்கள் அங்கு வீடு கட்டவில்லை.புதிய பயனாளிகளுக்கு அந்த இடத்தில் பட்டா வழங்க நில அளவை பணி செய்த போதும், அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது கூட, அங்கு ஏற்கனவே பட்டா பெற்றிருப்பதாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.மாறாக, வேறு நபர் களுக்கு பட்டா வழங்கப்பட்ட பின், ஆட்சே பனையை தெரிவிக்கின்றனர். இது குறித்து, உயரதி காரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.