கோவிலம்பாக்கம்--தண்ணீரை வாட்டர் ஹீட்டரில் சுடவைத்த போது, மின்சாரம் பாய்ந்து பிளஸ் 1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.சென்னை, கோவிலம்பாக்கம், சத்யா நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம், 15. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று காலை மின்சார 'வாட்டர் ஹீட்டர்' வாயிலாக தண்ணீர் சுடவைத்தார். சற்று நேரத்தில் தண்ணீர் சுட்டுவிட்டதா என அறிய, பாத்திரத்தில் கை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஷியாம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.