திருப்பூர்:ஸ்ரீரங்கம் கோவில் பூஜை முறையை பின்பற்றும் பெருமாள் கோவில் களில், வரும் 14ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.நடப்பு ஆண்டில், வைகுண்ட ஏகாதசி விழா, கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. அதனை பின்பற்ற, திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில்களிலும், 14ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், 14ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவர் திருமஞ்சனமும், 4:30 மணிக்கு, வைகுண்ட நாராயணமூர்த்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. காலை, 5:45 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.கருடவாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நாராயணமூர்த்தி, சொர்க்கவாசல் வழியாக சென்று, நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.l திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் உள்ள, பெரும்பண்ணை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில், வரும் 14ம் தேதி அதிகாலையில், உற்சவமூர்த்தி திருமஞ்சன பூஜையும், காலை 6:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீவரதராஜபெருமாள், புஷ்ப அலங்காரத்துடன் கருடவாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 15ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு உற்சவம் திருமஞ்சனமும், காலை, 6:00 மணிக்கு, துவாதசி பாராயணம் நிகழ்ச்சியும், 7:00 மணி முதல் அன்னதானமும் நடைபெற உள்ளது.திருப்பூரில் அடுத்த மாதம்...
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், ஜன., மாதத்தில், வைகுண்ட ஏகாதசி விழா நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்வழி வரதராஜபெருமாள் கோவில் பட்டாச்சாரியர் கோவிந்தராஜ் கூறுகையில், ''ஸ்ரீரங்கம் கோவில் வழிபாட்டு முறையின் அடிப்படையில், 14ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்க உள்ளது. வழக்கமான வழிபாட்டு முறையின்படி, ஆருத்திரா தரிசனத்துக்கு முன்னதாக, வைகுண்ட ஏகாதசி விழா நடக்க வேண்டும்; வரும், 19 ம் தேதி, ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதால், 14 ம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பு பூஜைகள் நடக்க உள்ளன,'' என்றார்.