ஆலாந்துறை : பூண்டி, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், சிதிலமடைந்த குளியலறையில் பக்தர்கள் குளிக்கும் அவலநிலை உள்ளது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து செல்வது வழக்கம். இக்கோவிலின் பின்புறத்தில், முடிகாணிக்கை மண்டபத்தின் அருகில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான, 5 சென்ட் இடம் உள்ளது.
இங்கு 2005ம் ஆண்டு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் தொட்டி மற்றும் குளியலறைகள் புதுப்பித்து கட்டப்பட்டன. அதன்பின், மீண்டும் சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த குளியலறை கட்டடம், முற்றிலும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. தற்போதும் இந்த குளியலறை கட்டடத்தை, பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, உடனடியாக சிதிலமடைந்த குளியலறையை புதுப்பித்து, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இது குறித்து, பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் செயல் அலுவலர் சந்திரனிடம் கேட்டபோது, "இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்றார்.