ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டிய வீடுகளில் ரூ.50 லட்சம் நகைகளை கொள்ளையடித்த தேனி மாவட்ட கொள்ளையர்களை கைது செய்ய சென்ற போலீசாரை அந்த ஊர் மக்கள் 'கெரோ' செய்தும் துணிச்சலுடன் செயல்பட்ட போலீசாரை எஸ்.பி., கார்த்திக் பாராட்டினார்.
ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை கிராமத்தில் துபாயில் வேலை செய்யும் சீனிமுகமது, மலேசியாவில் வேலை செய்யும் அகமது அலி, அக்பர் அலி ஆகியோரது ஆள் இல்லாத வீடுகளில் 108 பவுன் நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் என ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் ராமச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.தேனி மாவட்டம் தேனி அரண்மனைபுதுார் முத்தையா 45, மணிகண்டன் 34, ரெங்கநாதன் 48, ஆகிய மூவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மூவரும் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் தொடர்புடைய தேனி அண்ணா நகரைச் சேர்ந்த ஆனந்த் 30, மதுரை திருப்பரங்குன்றம் அருண்பாண்டி என்ற ஜெட்லி 27, இருவரையும் நேற்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக் கூறியது: இவர்கள் பல ஆண்டுகளாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.ராமநாதபுரம் கொள்ளை தொடர்பாக தேனி அரண்மனை புதுாரில் கைது செய்ய சென்ற போது, தனிப்படை போலீசாரை ஊர் மக்கள் திரண்டு 'கெரோ' செய்தனர். இருந்தும் திறமையாக செயல்பட்டு கொள்ளையர்களை துணிச்சலுடன் கைது செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கும் பொருட்களை அடகு வைத்து பணம் திரட்டியதோடு, ஜேப்படி திருட்டுகளில் ஈடுபடும் திருப்பரங்குன்றம் அருண்பாண்டி, ஆனந்தும் கைது செய்யப் பட்டு உள்ளனர்.
பழைய எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் விற்பது போல் இவர்கள் நோட்டமிட்டு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். நகைகள் முழுமையாக பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும் வீரக்குமார், காளியப்பன் இருவரையும் தேடுகிறோம்.-
கைலியை கூட விடாத திருடன்
மேலக்கோட்டையில் ஒரு வீட்டில் திருடச் சென்ற போது அங்கு எதுவும் கிடைக்காத நிலையில், வெளியே கொடியில் உலர்த்துவதற்காக தொங்க விட்டிருந்த கைலியை கூட ஒரு திருடன் எடுத்து உடுத்திக்கொண்டு ஓடியதை தெரிவித்துள்ளான். அந்த காட்சியும் சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளது, என்றார்.----