பொங்கலுார்:மாசி துவங்கி புரட்டாசி வரை முருங்கை வரத்து அதிகம் இருந்தது. ஐப்பசி துவங்கியதிலிருந்து அடை மழை பெய்யத் துவங்கியதால் முருங்கை பூக்கள் உதிர்ந்தது. காய் வரத்து படிப்படியாக குறைந்ததால் முருங்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் முருங்கைக்காய்களை வாங்க ஆர்வம் காட்டினர். காய் வரத்து இல்லாததால் சில்லரை விலையில் ஒரு காய், 40 ரூபாய்க்கு விற்பனையானது. வரலாறு காணாத விலைக்கு விற்பனையானதால் பொதுமக்கள் முருங்கைகாய் வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.விவசாயிகள் கூறுகையில், ''மழையால் பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சலே இல்லை. மேலும் பூச்சித்தாக்குதல் அதிகரித்ததால் இலைகள் அனைத்தையும் பூச்சிகள் சாப்பிட்டு விட்டன. மரங்கள் காய்ந்து வறண்ட மரங்களைப் போல காட்சியளிக்கிறது. தற்போதுதான் துளிர் விடத் துவங்கி உள்ளது. மாசி இறுதி முதல் முருங்கை வரத்து அதிகரிக்கும். பங்குனி மாதத்தில் சீசன் களைகட்டும். அப்போது விலை சரிந்துவிடும்'' என்றனர்.