திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஏ.டி.எம்., மையம் இதுவரை அமைக்கப்படாததால் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.மேலும், மலைக்கோவிலில் கடைகள் மற்றும் கோவில் குருக்கள் என, 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
இந்நிலையில், மலைக்கோவிலில் வசிக்கும் குருக்கள், பக்தர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்களது அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் தேவை என்றால், மலையில் இருந்து கீழே, திருத்தணி - -அரக்கோணம் சாலைக்கு தான் வர வேண்டும்.இதுதவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள், நித்ய அன்னதானம், பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கத்தேர், வெள்ளி மயில் வாகனம் மற்றும் திருக்கல்யாணம் போன்ற சேவை டிக்கெட்டுகளுக்கு மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
இதுபோன்ற நேரத்தில் பக்தர்களுக்கு பணம் திடீரென தேவைப்பட்டால், 3 கி.மீ., துாரம் கீழே இறங்கி வந்து தான், ஏ.டி.எம்., மையம் மற்றும் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.எனவே, பக்தர்கள், வியாபாரிகள் நலன் கருதி மலைக்கோவில் வளாகத்தில் அரசுடைமை வங்கிகளின் ஏ.டி.எம்., மையமோ அல்லது தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்., மையமோ அமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.