கரூர்: முருங்கை விதைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில், 25 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி நடக்கிறது. கடந்த, அக்.,ல் முருங்கை சீசன் முடிந்த நிலையில், காய்களை விதைக்காக விவசாயிகள், மரத்தில் விட்டு வைத்திருந்தனர். இதனால், முருங்கை விதை உற்பத்தி அதிகரித்தது. இந்நிலையில், கோடைக்காலம் நெருங்கும் நிலையில், புதிதாக முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்காமல் உள்ளனர். இதனால், அரவக்குறிச்சி வட்டாரத்தில், 30 டன் முருங்கை விதைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து, விதை உற்பத்தி விவசாயிகள் கூறுகையில், 'கடந்த மார்கழி மாதத்தில் மழை பெய்ததால், கோடை காலமான மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் மழை பெய்யுமா என, தெரியவில்லை. கடந்த, இரண்டு மாதங்களாக மழை பெய்தும், அரவக்குறிச்சி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. இதனால், புதிதாக முருங்கை சாகுபடியை துவக்க தயக்கம் காட்டுகின்றனர். வழக்கமாக, ஒரு கிலோ முருங்கை விதை, 750 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். தற்போது, 500 ரூபாய்க்கு விற்பதே அரிதாக உள்ளது. முருங்கை விதையை இருப்பு வைத்துள்ள, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.