கோவை; 'சிசிடிவி' கேமரா பொருத்தாத கடை உரிமங்களை ரத்து செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்படும்' என, எச்சரித்து, மாநகர போலீசார் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றம் நடந்தால் அதில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும், 'சிசி டிவி' கேமராக்கள் பேருதவியாக இருக்கின்றன. நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சாலை சந்திப்புகள், பொதுமக்கள் வந்து செல்லும் அரசு, தனியார் கட்டடங்கள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்களில் 'சிசி டிவி' கேமரா பொருத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்த அந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, 'சிசி டிவி' கேமரா பொருத்தும் பணியை உடனடியாக செய்யுமாறு, கடைக்காரர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக, மாநகரில் இருக்கும் கடை, வணிக நிறுவனம், வணிக வளாகம் அனைத்தையும் நேரில் ஆய்வு செய்து கேமரா உள்ளதா, இல்லையெனில் எத்தனை கேமராக்கள் தேவை என்பதை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க, போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடை கடையாக போலீசார் சென்று ஆய்வு செய்கின்றனர். கேமரா பொருத்தப்படாத கடைக்காரர்களுக்கு, 'கடை உரிமம் ரத்து செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்படும்' என, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குகின்றனர். இதன் மூலம் 'சிசி டிவி' கேமரா பொருத்தும் பணி விரைந்து நடக்கும் என்றும், குற்றச்சம்பவங்களில் துப்பு துலக்குதல் எளிதாகும் என, போலீசார் நம்புகின்றனர்.