கோவை;4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை முற்றுகையிட்டு, 'செல்பி' எடுக்கும் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு இதுவரை, 4ஜிக்கான தொழில்நுட்ப உதவியும், நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. 5ஜி அனுமதி தற்போது பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குவழங்கப்பட்டுள்ளது.பி.எஸ்.என்.எல்.,க்கு 5ஜி அனுமதியும் வழங்கப்படவில்லை.தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை துவங்கியுள்ள காரணத்தால் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடக்கின்றன.இதை பயன்படுத்தி, தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஏற்கனவே, பெரும் தொற்றின் காரணமாக வழக்கமான வருமானத்தை இழந்துள்ள மக்கள், தற்போது இணைய தொடர்புக்காக அதிக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். பி.எஸ்.என்.எல்., நிறுவனம் குறைந்த கட்டணங்களுடன் சேவையாற்றி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை உரிமையையும் அதனை செயல்படுத்த தொழில்நுட்ப உதவிகளையும் நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும். தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வை குறைக்க, அரசு தலையிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.