திருப்பூர்:நம்பியூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில், 600 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி நடுகல் கண்டறியப்பட்டது.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில், திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் ஆய்வு நடத்தினர். அப்போது, பண்டைய தமிழர் வீரத்தை விளக்கும் வகையிலான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது:பண்டைய தமிழர்கள், கால்நடைகளை பெரும் செல்வமாக போற்றி பாதுகாத்தனர். மாடுகளை பாதுகாக்க கிராமம் தோறும் வீரர்கள் இருந்தனர். வேட்டையாட வரும் புலியிடம் இருந்து, கால்நடைகளை பாதுகாப்பது இவர்களது கடமையாக இருந்தது. புலிகளுடன் சண்டையிடும்போது, வீரமரணம் எய்தும் வீரர்களுக்கு நடுகல் எழுப்பி, தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
நம்பியூர் கோவில் வளாகத்தில், 80 செ.மீ., உயரம், 65 செ.மீ., அகலம் கொண்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவீரர் ஒருவர், வலது கையில் ஓங்கிய வாளுடன், இடது கையில் கேடயம் பிடித்தபடி, புலியுடன் சண்டையிடுவது போல் நடுகல் அமைந்துஉள்ளது. எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல், 600 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்ய முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.