ஆனைமலை: ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர், 'இல்லம் தேடி நுாலகம்' எனும் திட்டத்தை துவங்கி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வருகிறார்.
\தமிழகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக, பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கிறது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.இந்நிலையில், வீடுகளில் இருக்கும் மாணவர்கள், தங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும், பல தகவல்களை தெரிந்துகொள்ளவும், 'இல்லம் தேடி நுாலகம்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணியை துவங்கியுள்ளார்
அரசுப்பள்ளி ஆசிரியர்.ஆனைமலை அருகேயுள்ள, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர் பாலமுருகன், 45. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், மாணவர்களுடன் இணைந்து, சூழல் பாதுகாப்பு, நாட்டுப்புற கலைகள் மீட்பு என, பலவற்றை செய்து வருகிறார்.
'இல்லம் தேடி நுாலகம்' திட்டம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதில் இருந்து...கொரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் கடும் சிரமத்தில் உள்ளனர். பலரும் மொபைல்போனுக்கு அடிமையாகி, சிந்தனைத்திறன், வாசித்தல் திறனை இழக்கின்றனர்.
மாணவர்கள் வாழ்க்கை வளமானதாக மாற, வாசித்தல் அத்தியாவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, அரசின் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் போல், 'இல்லம் தேடி நுாலகம்' என்ற திட்டத்தை உருவாக்கினேன். சேகரிக்கப்பட்ட நுால்கள், பள்ளி நுாலகத்திலுள்ள புத்தகங்களை, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குகிறேன்.பைக்கில் புத்தகங்களை எடுத்துச் செல்கிறேன், மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற புத்தகங்களை தேர்வு செய்து படிக்கின்றனர்.
சிறுவர் கதைகள், அறிவியல் கதைகள், நீதிக்கதைகள், இயற்கை பாதுகாப்பு சார்ந்த புத்தகங்கள் வழங்கி வருகிறேன்.மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை பெற்று வாசிக்கின்றனர். பலரும் முன்வந்து புத்தக தானமும் வழங்குகின்றனர்.
பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 163 மாணவர்கள் உள்ளனர். கிராமம் வாரியாக சென்று, புத்தகங்கள் வழங்கப்படுகிறது. புத்தகம் தர விரும்புவோர், 99652 26666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.