கரூர்: க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையம், கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் ஆரியூர், நெடுங்கூர், காருடையாம்பாளையம், முன்னூர், க.பரமத்தி, குப்பம் உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும், 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஆனால், நோயாளிகளுக்கு போதிய வசதி இல்லாததால், அவர்களுக்கு அப்போதைய சிகிச்சை மட்டும் அளித்து டாக்டர்கள் அனுப்பி வைக்கின்றனர். நாள்பட்ட வியாதி உள்ளோரை தங்க வைக்க போதிய வசதி இல்லை. மேலும் பிரசவத்திற்கென்று தனி அறையும் இல்லாததால், கர்ப்பிணி பெண்கள் சிரமப்படுகின்றனர். க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி, தரம் உயர்த்த வேண்டும்.