கோவை: கோவையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பரிசு மழை பொழிந்தது. வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கார், பைக், தங்க நாணயம், சைக்கிள், 'டிவி' என ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
கோவை, செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலை மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்க நாணயம், கட்டில், சைக்கிள், பீரோ, 'டிவி', அண்டா, ஹாட்பாக்ஸ் ஆகியவை உடனுக்குடன் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் அதேபோல், பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி முடிவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''போட்டிக்கு, 1,250 காளைகள் வந்திருந்தன. ஆனால், குறித்த நேரத்தில் 873 காளைகள் மட்டுமே போட்டியில் களம் இறங்க முடிந்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 400 வீரர்கள் களம் இறங்கினர். இதில் 21 காளைகளை அடக்கி சாதனை படைத்த வீரர் குருவித்துறை மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆல்டோ கார் பரிசாக வழங்கப்படுகிறது,'' என்று அறிவித்தார்.
இரண்டாம் பரிசாக, 19 காளைகளை அடக்கிய மதுரையை சேர்ந்த பிரபா என்பவருக்கு புல்லட் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை 18 காளைகளை அடுக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கார்த்திக் பெற்றார்.
பரிசளிப்பு விழாவில் கலெக்டர் சமீரன் மற்றும் அரசு அதிகாரிகள், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டியை பார்வையிட பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், ஆளும் கட்சியினர், வி.ஐ.பி.,க்களின் கூட்டமே பெரும் கூட்டமாக இருந்தது.
சிறந்த காளைகள்
கோவை ஜல்லிக்கட்டு போட்டியின் சிறந்த காளையாக, கட்டிக்குடிபட்டி சுப்பிரமணியன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. இரண்டாம் இடத்துக்கு சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் காளை, மூன்றாம் இடத்துக்கு சேலம் சீலையம்பட்டி செந்தில் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.
102 வீரர்கள் காயம்
முதல் காளையாக, சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை வாடிவாசல் கடந்து வந்தது. இதை தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. லோகேஸ்வரி என்பவரின் 2 காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை.
அந்தப்பெண்ணுக்கு 2 தங்க நாணயங்கள் பரிசாக கிடைத்தன. காரமடையை சேர்ந்த கீர்த்திகாவின் காளைக்கும் தங்க நாணயம் பரிசாக கிடைத்தது; போட்டியில் ௧0௨ வீரர்கள் லேசான காயம் அடைந்தனர்.