ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சத்து, 45 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில், இளநீர் சாகுபடிக்கான, வீரிய ஒட்டுரக தென்னை, 3.2 லட்சம் மரங்கள் உள்ளன.
பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் சாகுபடியாகும் இளநீர் சென்னை, மதுரை, சேலம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி உள்பட, தமிழகம் முழுவதிலும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.அதேபோல், மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதிலும் வெயில் வாட்டி வதைப்பதால், இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைப்பதால், இளநீருக்கு கட்டுபடியான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென, இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இளநீருக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து பெரும் அளவு குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் இருந்து தினமும், 3 முதல் 3.5 லட்சம் இளநீர், நாடு முழுவதிலும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது.
தற்போது, வரத்து குறைந்து, 2 முதல் 2.5 லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. இனி கோடை காலத்தில் தினமும், 1.5 லட்சம் அளவுக்கு மட்டுமே வரத்து இருக்கும்.வரத்து குறைந்து, தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. தற்போது, ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடைகளில் மக்களுக்கு, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை, இடைத்தரகர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. பல வியாபாரிகள், இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைத்து, 16 ரூபாய் வரையில் மட்டுமே விலை கேட்கின்றனர். விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து, 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.