அவிநாசி:விசைத்தறி இயக்கியதில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, அவிநாசி போலீஸ் ஸ்டேஷனை விசைத்தறி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.கூலி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த, 9ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். அவிநாசி வட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் ஒருவர் சொந்த ரகம் வைத்து, விசைத்தறி இயக்கி வருகிறார். அவர், ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தராமல் விசைத்தறி இயக்கி வந்துள்ளார்.
அப்பகுதி விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர், அவரது தறி குடோனுக்கு சென்று, 'ஸ்டிரைக்கிற்கு ஆதரவு கொடுத்து, விசைத்தறி இயக்குவதை நிறுத்த வேண்டும்' என கேட்டுள்ளனர். இதை அவர் ஏற்க மறுத்ததால் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த விவாதத்தை 'வீடியோ'வாக பதிவு செய்த சிலர், சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். ''இந்த 'வீடியோ'வால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது; 'வீடியோ'வை பரவவிட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, விசைத்தறி உரிமையாளர் அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
தகவல் அறிந்து, ஜெயபிரகாஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவிநாசி முழுக்க உள்ள விசைத்தறி உரிமையாளர்களில், 300க்கும் மேற்பட்டோர், போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்தனர்.இருதரப்பினர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் கீதா பேச்சு நடத்தினார். முடிவில், "வழக்கம் போல் விசைத்தறி இயக்குவேன்; யாரும் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது" என விசைத்தறி உரிமையாளர் கூறினார்.
அவர் சார்ந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிடுமாறு, இன்ஸ்பெக்டர் கூறினார். இதையடுத்து, விசைத்தறி உரிமையாளர்கள் கலைந்து சென்றனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.