ராமநாதபுரம்: மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பாலிதீன் பைகள், கப்,கவர்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. மண்வளத்திற்குகேடுவிளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில்பிளாஸ்டிக் கேரிபேக்குகள், கப், கவர்கள் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. சிறு ஓட்டல்கள், கடைகள், மார்க்கெட், பஜார், இறைச்சி கடைகளில் பாலிதீன் தாராளமாக பயன்படுத்துகின்றனர்.
இவ்விஷயத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. அதுவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பாலிதீன், பிளாஸ்டிக் விற்பனையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குப்பைகொட்டும் இடங்கள், தொட்டிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துகிடக்கிறது. சில ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
மேலும் நீர்நிலைகள், ஓடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது அவற்றை அகற்ற வேண்டும். தடைசெய்யப்பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர்சங்கர் லால் குமாவத் உத்தரவிட வேண்டும்.