கோவை:ரேஷன் கடைகளில் தற்போதுள்ள '2ஜி நெட் ஒர்க்'கை மாற்றாமல் ஆன்லைன் வினியோகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கென, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், இணையம் வாயிலாக இயங்கும் மின் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர் கைரேகை பதித்த பிறகு பொருட்கள் வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வரில் அடிக்கடி ஏற்படும் பிரச்னையால் இணைய வேகம் குறைந்து இம்மின் சாதனம் சரி வர இயங்குவதில்லை. இந்த சாதனம், '2ஜி நெட் ஒர்க்'கில் இயங்குவதால் வேகமாக இருக்காது, வாரத்தில் நான்கு நாட்கள் கோளாறு ஏற்பட்டு, பொருட்கள் வழங்குவதில் தடங்கள் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புலம்புகின்றனர்.
பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்புவதுடன், கோபத்தில் ரேஷன் கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். பல குடும்ப அட்டைதார்களின் கைரேகை இயந்திரத்தில் பதிவாவதில்லை.ரேஷன் கடைகளை பொறுத்தவரை இது தீராத பிரச்னையாக இருந்து வருகிறது.இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது, கைரேகை பதிவு வேண்டாம் என, நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்த பின்னரே பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்ற பழைய நடைமுறையை அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
ரேஷன் கடை உழியர்கள் கூறுகையில், 'இந்த 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு தீர்வு காணாமல், ஆன்லைன் பதிவு மூலம் பொருட்கள் வழங்குவது சரியாக வராது. கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் கொடுக்க கூடாது என, அதிகாரிகள் கூறுகின்றனர்; ஆனால், பலருக்கு கைரேகை பதிவாவதில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டால் கண்டு கொள்வதில்லை. ரேஷன் கடைகளை பொறுத்தவரை தற்போது உள்ள '2ஜி நெட் ஒர்க்'கை மாற்றாமல் ஆன்லைன் வினியோகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது' என்கின்றனர்.
பொருட்கள் வாங்கலாம்!
கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரியிடம் கேட்டபோது, ''நெட் ஒர்க்' பிரச்னை அனைத்து கடைகளிலும் இருப்பதில்லை. சில நாட்களில் தடங்கள் இருக்கும். இதற்கென, எல்லா தாலுகாவிலும் இன்ஜினியர்கள் உள்ளனர்; அரை மணி நேரத்தில் சரி செய்து விடுவார்கள். ஆதார் 'அப்டேட்' செய்யதாவர்களுக்கு ரேகை பதிவாகாது.
இவர்கள், ஆதார் பதிவை உறுதி செய்ய வேண்டும். கைரேகையில் பிரச்னை இருப்பவர்கள் தாலுகா வழங்கல் அதிகாரியிடம் அனுமதி பெற்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.