கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள், மானியம் பெற்று புதிய மின் மோட்டார் பம்ப் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் ஸ்ரீதர் செய்திக் குறிப்பு:
சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் தொடர்பாக தனி நிதி நிலை அறிக்கை அறிவிக்கப்பட்டு, அரசாணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பாசன நீர் இறைத்திட புதிய மின்மோட்டார், பம்ப் செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிதாக பொருத்தவும் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், 3 ஏக்கர் வரை விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல் கிணறு அமைந்துள்ள நில வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விபரம் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் வருவாய் கோட்ட பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் நேரில் வந்து மனு அளித்து பதிவு செய்யலாம்.
அதேபோல், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வெள்ளிமலை மற்றும் சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை எண்.3, வெற்றிவேல் காம்ப்ளக்ஸ், தச்சூர் கூட்ரோடு, கள்ளக்குறிச்சி 606 202, தொலைபேசி 04151- 291125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை வட்ட விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, 45/72 பெரியார் தெரு, என்.ஜி.ஜி.ஓ., நகர், திருக்கோவிலுார் 605 757, தொலைபேசி 04153- 253333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.