திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் என, திருப்பூர் மாவட்டம், 440 வார்டுகளுக்கான நகர உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, 11.32 லட்சம் வாக்காளரும், மாவட்ட அதிகாரிகளும் தயாராகிவிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டுகள் உள்ளன; மூன்று லட்சத்து, 62 ஆயிரத்து, 353 ஆண்கள்; மூன்று லட்சத்து, 50 ஆயிரத்து, 247 பெண்கள்; 170 திருநங்கையர் னெ, 7.12 லட்சம் வாக்காளர்கள், மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க தயாராகிவிட்டனர்.
உடுமலை நகராட்சி -33, தாராபுரம் -30, திருமுருகன்பூண்டி -27, வெள்ளகோவில் -21, பல்லடம் மற்றும் காங்கயம் நகராட்சிகளில், தலா, 18 வார்டுகள் என, ஆறு நகராட்சிகளில், 147 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.ஆறு நகராட்சிகளில், ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 998 ஆண்கள்; ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 364 பெண்கள்; 21 திருநங்கைகள் என, இரண்டு லட்சத்து, 45 ஆயிரத்து, 383 வாக்காளர் உள்ளனர். காங்கயம் நகராட்சியில் மட்டும், திருநங்கை வேட்பாளர் இல்லை.அவிநாசி, கொளத்துப்பாளையம், மடத்துக்குளம் ஊராட்சியில், தலா 18 வார்டுகள் உள்ளன; தளி பேரூராட்சியில், 17 வார்டுகளும், கன்னிவாடியில், 12 வார்டுகளும் உள்ளன. மற்ற 10 பேரூராட்சிகளில், தலா, 15 வார்டுகள் உள்ளன.பேரூராட்சிகளில் மொத்தம், 84 ஆயிரத்து, 827 ஆண்கள்; 89 ஆயிரத்து,384 பெண்கள்; எட்டு திருநங்கைகள் என, ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 219 வாக்காளர் உள்ளனர்.ஆகமொத்தம், திருப்பூர் மாவட்டத்தில், 440 வார்டுகளுக்கு, நகர உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
நகர உள்ளாட்சிகள் அளவில், ஐந்து லட்சத்து, 66 ஆயிரத்து, 178 ஆண்கள்; ஐந்து லட்சத்து, 65 ஆயிரத்து, 995 பெண்கள்; 199 திருநங்கைகள் என, 11 லட்சத்து, 32 ஆயிரத்து, 372 வாக்காளர் உள்ளனர். கவுன்சிலர் ஆகும் கனவுடன் தி.மு.க., - அ.தி.மு.க., உள்பட பல்வேறு கட்சியினரும் வலம் வருகின்றனர்.கடந்த, 2011க்கு பிறகு, நகர உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை; 2016 தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 11 ஆண்டுகளுக்கு பிறகு, தேர்தல் நடப்பதால், தேர்தலின் மூலமாக, கவுன்சிலரை தேர்வு செய்ய, வாக்காளர் தயாராகிவிட்டனர்.
பெண்களுக்கே 'சக்தி'
திருப்பூர் மாநகராட்சியில், ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளர் குறைவாக உள்ளனர். ஆறு நகராட்சிகளிலும், ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளரே பெரும்பான்மையாக உள்ளனர். மற்றபடி, 15 பேரூராட்சிகளிலும், ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர் அதிகம் உள்ளனர்.நகர உள்ளாட்சியை சந்திக்க உள்ள வாக்காளரில், ஆண்களை காட்டிலும், பெண்கள் 183 பேர் மட்டும் குறைவாக உள்ளனர். மாநகராட்சியின், 60 வார்டுகள் நீங்கலாக, மற்ற அமைப்புகளின், 380 வார்டுகளில், பெண் வாக்காளரே, வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.