கரூர்: கரூர் நகராட்சி பகுதிகளில், நாளுக்கு நாள் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரூர் நகராட்சி பகுதியை சுற்றி, அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றிலிருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது. வாய்க்கால்களில் தற்போது தண்ணீருக்கு பதிலாக சாக்கடை நீரே செல்கிறது. இதனால், பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால், மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். குறிப்பாக, பழைய சணப்பிரட்டி பஞ்., இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கொசுக் கடியால் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். பழைய தாந்தோணி நகராட்சி பகுதிகளில், வளர்த்து வரும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, கரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கரூர் நகராட்சியில் உள்ள எந்த பகுதிகளிலும் குப்பைகளை தேங்க விடாமல் அப்புறப்படுத்த வேண்டும். கரூர் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தரமான கொசு ஒழிப்பு மருந்துகளை கொள்முதல் செய்து, முறையாக பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.