நாகப்பட்டினம்:நாகை மீனவர்களை நடுக்கடலில், இலங்கை கடற்கொள்ளையர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகையைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது பைபர் படகில் வசந்தபாலன், 28; நிர்மல், 28; மணிகண்டன், 24; தில்லைநாதன், 25, ஆகிய நான்கு மீனவர்கள், நேற்று முன்தினம் மதியம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.நள்ளிரவில், இலங்கை கடற்கொள்ளையர் எட்டு பேர், நாகை மீனவர் படகில் இருந்த மீன்கள் மற்றும் பொருட்களை தங்கள் படகில் ஏற்றி விடுமாறு கூறியுள்ளனர்.
மீனவர்கள் மறுத்ததால், இலங்கை கடற் கொள்ளையர் அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டி, உருட்டுக் கட்டையால் தாக்கினர்.பின், நாகை மீனவர் படகில் இருந்த 100 கிலோ மீன்கள், யமஹா இன்ஜின், ஜி.பி.எஸ்., கருவி, இன்வெர்ட்டர் பேட்டரி மற்றும் மீனவர்களின் மொபைல் போன்களை பறித்துச் சென்றனர்.
படுகாயத்துடன் படகில் மயங்கி கிடந்தவர்களை அவ்வழியே வந்த மீனவர்கள் மீட்டு, வேதாரண்யம் அழைத்து வந்தனர். படுகாயமடைந்த மீனவர்களுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.