புதுமாவிலங்கை:புதுமாவிலங்கை ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் மற்றும் குட்டையில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இங்குள்ள மெட்ரோ குடிநீர் நீரேற்றும் நிலையம் அருகே, அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.இப்பகுதியில் தான், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை போன்ற அரசு அலுவலகங்களுக்கு இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருவதாக அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்பகுதியில், தற்போது, மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதேபோல் ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அருகே உள்ள அம்மன் கோவில் பகுதியில் ஊராட்சி குட்டையில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.
காவல் துறையினரும், வருவாய் துறையினரும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் மற்றும் குட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே, புதுமாவிலங்கை பகுதியில் கூவம் ஆற்றில் மணல் கடத்தல் நடந்து வரும் நிலையில், தற்போது அரசு நிலம் மற்றும் குட்டையில் மணல் கடத்தல் நடைபெறுவது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.