திருத்தணி:சலவை தொழிலாளர்கள் துணி துவைக்க பயன்படுத்தும் பாறை கற்கள் மற்றும் வீரபத்ர சுவாமி கோவிலில், நடந்த மைலார் திருவிழாவில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வமான, வீரபத்ர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில், துணி துவைக்கும் பாறை கற்கள், தண்ணீர் குளம் ஆகியவற்றிக்கு ஆண்டுக்கு ஒரு முறை தை மாதத்தில் சலவை தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றுகூடி பொங்கல் வைத்து வழிபடுவது மைலார் திருவிழா ஆகும்.
அந்த வகையில், மைலார் விழா சங்க தலைவர் நதியா தலைமையில் நடந்தது. காலை 10:30 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் கூடைகளை தலையில் சுமந்துவாறு, அனுமந்தாபுரம் பகுதியில் உள்ள குட்டைக்கு வந்தனர்.பெண்கள் அங்கு பொங்கல் வைத்து, மூலவர் வீரபத்ர சுவாமி, பாறைகற்களுக்கு பொங்கல் படைத்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர்.அதை தொடர்ந்து, சலவை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் உணவை சாப்பிட்டு, மாலை 5:00 மணிக்கு, தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.