குன்னுார்--குன்னுார் நகராட்சியின் குடிநீர் ஆதாரமான, ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறுகிறது.குன்னுார் நகராட்சியில், முக்கிய குடிநீர் ஆதாரமாக, ரேலியா அணை விளங்குகிறது. 43.6 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த, 2019 ஜூன் மாதம் வறண்டது. இதனால், 14 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. மக்கள் சிரமப்பட்டனர். கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக, 5 மாதங்களுக்கு முன்பு நிரம்பியது. நகர பகுதிகளுக்கு தடையின்றி, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்ற 38 அடியாக இருந்தது.தற்போது மழை இல்லாத நிலையிலும், நீர் பிடிப்பு பகுதிகளின் காரணமாக, அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறுகிறது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அணையில் போதிய அளவில் தண்ணீர் உள்ளதால், கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை,' என்றனர்.