வால்பாறை:வால்பாறை வழியாக, கேரள மாநிலம் திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என, இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் உள்ள வால்பாறையில், கேரள மாநிலத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள, மளுக்கப்பாறைக்கு கேரள மாநிலம் சாலக்குடியிலிருந்து, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக அரசு பஸ் இயக்கப்படுகிறது.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பல ஆண்டுகளாக சாலக்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், கடந்த,ஆறு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இதனால், இருமாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மக்கள் கூறியதாவது:வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அதிக அளவில் சென்று வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், இருமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியர்களும் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.இந்நிலையில், வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும். அதேபோல், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வழியாக, பாலக்காடு, திருச்சூருக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.