கரூர் : வெள்ளியணை வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் சாலையை, அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகரிலிருந்து, தான்தோன்றிமலை, மணவாடி, வெள்ளியணை, கூடலுார், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார், எரியோடு வழியாக, பல ஆண்டுகளாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் திண்டுக்கல்லுக்கு செல்கின்றன. ஆனால், மதுரை, திண்டுக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு, தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பின், வாகனங்கள் வெள்ளியணை சாலையில் செல்வது குறைந்து வருகிறது. இதனால், வெள்ளியணை - திண்டுக்கல் சாலையில் உள்ள, பல்வேறு கிராமப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் போது, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், திண்டுக்கல்லுக்கு, வெள்ளியணை வழியாக திருப்பி விடப்படுகிறது.
இதனால், அடிக்கடி வெள்ளியணை-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையொட்டி, வெள்ளியணை - திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டியது அவசியம்.