செம்பியம் : மொபைல் போன் பறிக்க முயன்றோர், தாய், மகனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
வியாசர்பாடி, பெரியார் நகர், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன், 46. இவர், அயனாவரத்தில், மளிகை கடை வைத்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது மகன் பத்மநாபன், 18, வீட்டருகே, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக மது போதையில் வந்த வியாசர்பாடி, தமிழ்செல்வன் தெருவைச் சேர்ந்த சுந்தர், 21, பார்த்திபன், 21, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், பத்மநாபனிடம் மொபைல் போன் பறிக்க முயன்றனர்.அவர், அவர்களை தடுத்தார். அதனால் அவரை அடித்தனர். அதைக்கண்ட அவரது தாய் மீனாட்சி, மகனை மீட்க சென்றார். அவரையும் அவர்கள் கல்லால் அடித்தனர். இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், மூவரையும் கைது செய்தனர்.