கடலுார்;கடலுார் மகளிர் கல்லுாரி கழிவறையில் மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் செம்மண்டலத்தில், கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லுாரி உள்ளது. பச்சையப்பா டிரஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லுாரி காலை, மாலை என இரு ஷிப்ட் முறையில் இயங்குகிறது.மாலை நேர வகுப்புகள் மட்டும் சுய நிதி கல்லுாரியாக செயல்படுவதால் கட்டணம் செலுத்தி மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மகள் தனலட்சுமி, 19; மாலை நேர வகுப்பில் பணம் செலுத்தி, பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி கல்லுாரிக்கு சென்று வந்தார். நேற்று மாலை நேர வகுப்புக்கு வரவேண்டிய அவர், அதிகாலை 7:30 மணிக்கே கல்லுாரிக்கு வந்துள்ளார். நேராக கல்லுாரி பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று, துப்பட்டாவால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கல்லுாரி பெண் ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது, தனலட்சுமி துாக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அலறியபடி ஓடிவந்து தகவல் தெரிவித்தார். பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, மகேஸ்வரி மற்றும் போலீசார், கல்லுாரியில் விசாரணை நடத்தினர்.தனலட்சுமியை சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை மாலை அவரது தந்தை, நாகலிங்கம் கல்லுாரி விடுதியில் கொண்டு வந்து விட்டதாக அவருடன் தங்கியிருந்த மாணவியர் தெரிவித்தனர்.தனலட்சுமியின் புத்தக பையை சோதனை செய்ததில், தனது அண்ணனுக்கு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதி வைத்திருந்தார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வேறு காரணமா ஏதாவது உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெற்றோர் வாக்குவாதம்
தனலட்சுமியின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் கல்லுாரியில் முதல்வரின் அறைக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விடுமுறை முடிந்து, விடுதிக்கு வரும் போது, தங்களது மகள் நன்றாக இருந்ததாகவும், திடீரென தற்கொலை செய்து கொண்டது நம்ப முடியவில்லை. சாவில் சந்தேகம் உள்ளது' என கூறினர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதையேற்று உறவினர்கள் கலைந்து சென்றனர்.பின், தனலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.