கரூர்:மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பிடங்களை, உடனடியாக திறக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், மாயனுார் வழியாக நாள் தோறும், 20க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மேலும், மாயனுாரில் இருந்து நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள்தோறும் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரங்களில் உள்ள, கழிப்பிடங்கள் பெரும்பாலும் பூட்டப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கழிப்பிடம் கட்ட வேண்டும் என, பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், கரூர் ரயில்வே ஸ்டே ஷன் வளாகத்தில் புதிதாக, நவீன வசதிகளுடன் சில மாதங்களுக்கு முன், கழிப்பிடம் கட்டும் பணி துவங்கி, பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால், புதிய கழிப்பிடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு, திறந்து விடாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இதனால், மாயனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள், தொடர்ந்து திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, கழிப்பிடங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.