கூடலுார்:முதுமலை, மசினகுடி பகுதியில் துவங்கிய, பருவமழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில், 136 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் பருவ மழைக்கு முந்தைய, பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. நடப்பாண்டு முதுமலை உள்வட்டம் பகுதியில், வனவிலங்கு கணக்கெடுப்பு, 11ம் தேதி, துவங்கி, 15ல் நிறைபெற்றது.
தொடர்ந்து, முதுமலை மசினகுடி வெளிவட்டம் பகுதிகளான, சீகூர், சிங்கார, நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகங்களில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவக்கியது. இதற்காக வனப்பகுதியில், 34 பிரிவுகளாக பிரித்து, பிரிவுக்கு தலா நான்கு வன ஊழியர்கள் வீதம், 136 வன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'வனவிலங்கு கணக்கெடுப்பு பணி, 23 வரை நடக்கும். கணக்கெடுப்பு குறித்த விபரங்கள், 'டேட்டா ஷீட், மொபைல் போன்' செயலியில் பதிவு செய்து வருகின்றனர். பதிவுகளின், அடிப்படையில் வன விலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்,' என்றனர்.