கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2-ஏதேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில்உள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.ஓ., விஜய்பாபு, தமிழ்நாடு தேர்வாணையத்தின் மாவட்ட மேற்பார்வையாளர் சசிகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., யோகஜோதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், 'தேர்வில் முறைகேடுகள் ஏற்படாதபடி தேர்வு கூடங்களை கண்காணித்திட துணை கலெக்டர் நிலையில் 5 பறக்கும் படை மற்றும் தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையில் 14 சுற்றுக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.தேர்வு பொருட்களை பாதுகாத்திட மாவட்ட சார்நிலைக் கருவூலங்களுக்கும், சுற்றுக் குழுக்களுக்கும், தேர்வு நடைபெற உள்ள 66 மையங்களுக்கும் என மொத்தம் 90 காவல் துறை அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் வழிக்காவல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வர்கள் உரிய நேரத்தில் மையங்களுக்குச் செல்ல வசதியாக 21ம் தேதி காலை 5:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை கூடுதல் அரசு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்வு நாளன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
தேர்வு எழுதுவோர் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். காலை 9:00 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வு மையத்தில் மொபைல் போன் மற்றும் எந்த வகையான மின்னணு சாதனங்களையும் கொண்டுவர அனுமதியில்லை. தவறாமல் தேர்வு அனுமதிச் சீட்டினை கொண்டுவர வேண்டும். தேர்வு எழுத, கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேர்வு மையம் மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உதவி மைய தொலைபேசி எண்கள் 044-25300338, 25300339, 25300340, 18004190958 மற்றும் மின்னஞ்சல் முகவரியான grievance.tnpsc@tn.gov.inல் தொடர்பு கொள்ளலாம்.தேர்வர்கள் சிரமமின்றி தேர்வு எழுதிடவும், தேர்வு சுமூகமாக நடைபெறவும் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.