விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி சுடுகாடு பிரச்னை குறித்து நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டியில் காலனி தரப்பினர், வி.சாத்தனுார் ஓடை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர். சுடுகாட்டிற்காக நிரந்தரமாக இடம் ஓதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலனியைச் சேர்ந்த அமுதா, 65; என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய நிரந்தரமாக இடம் ஓதுக்கீடு செய்ய வேண்டும் என வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து, விழுப்புரம் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.தாசில்தார் இளவரசன், சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் சார்லின், வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் , கிராமத்தின் சார்பில் ஊராட்சி தலைவர் வீரப்பன், வேம்பன், குப்புசாமி, அருள் மொழி, மண்ணாங்கட்டி, தேவராசு, வாசு, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.முடிவில் அரசு தரப்பில் இடம் ஒதுக்கித் தருவதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து, அந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.