கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று காலை நீர்வரத்து, 2,300 கன அடியாக அதிகரித்ததால், அணைக்குள் வர, பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 14 நாட்களுக்கும் மேலாக மாலையில் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக தென்பெண்ணையாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து, ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு, 800 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதனால் கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் இரவு, 2,017 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 1,177 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு, 2,300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும், பிரதான ஒரு மதகு மற்றும் மூன்று சிறிய மதகின் மூலம், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையில் வசிக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் ஆகிய, ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 51 அடியை எட்டியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பெனுகொண்டாபுரத்தில், 51.2 மி.மீ., மழை பதிவானது.
அதேபோல், போச்சம்பள்ளி, 40.2, பாரூர், 32.4, நெடுங்கல், 19, ராயக்கோட்டை, 11, தளி, 5, கிருஷ்ணகிரி, 2.2 என மொத்தம், 161 மி.மீ., மழை பதிவானது.