கோவை:நுால் விலை உயர்வை கண்டித்து, 15 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நுால் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
நுால் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை (22ம் தேதி) முதல் ஜூன் 5ம் தேதி வரை, 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 1.5 லட்சம் முதல் 2 லட்சம் விசைத்தறிகள், 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகும்.
நுால் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், 50 சதவீத உற்பத்தி வேலை நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம், 16, 17ம் தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களை செய்தும் நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயர்வாகாத காரணத்தால், 15 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளனர்.
இதனால், நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ரூ.100 கோடிக்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும். பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நுால் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.