திருச்சி: போலீஸ் ஸ்டேசன்களில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமை தாங்கி பேசினார்.
மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி.,கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் தற்போது, இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில், 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் வைத்து, 950 மரணங்கள் நடைபெற்றுள்ளது . அதிலும் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளது.
அதனால், முதல்வர் ஸ்டாலின், இனி போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், ஒருவர் கூட உயிர் இழக்கக் கூடாது, என்று உத்தரவிட்டார்.அந்த அடிப்படையில் இந்த பயிற்சி முகாம், திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
ஒரு சிலர் போலீசாரை தாக்குகிறார்கள் அவர்களிடமிருந்து, தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தற்காப்பு கலைகளும் இந்த கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. சிறையில், இனி ஒருவர் கூட இறக்கக் கூடாது. போலீஸ் ஸ்டேசன்களில் மரணம் இனி இருக்கக் கூடாது. போலீசார் தேவைக்கு மட்டும் பலத்தை உபயோகப்படுத்தலாம்.
இதுவரையில், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு சிறந்த டாக்டர்கள் மூலமாக மனநல பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூலமாக, போலீசார் அதிகமானோருக்கு அந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. போலீசாருக்கு ஏற்படும், மன இறுக்கத்தை குறைப்பதற்காக, கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. போலீசார் ஆபத்து நேரத்தில், பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சில மலைப் பகுதிகளில் மட்டும் தான் இருக்கிறது. அதையும் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் சேர்வதற்காக, 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளார்கள். கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப் படும். இவ்வாறு அவர் கூறினார்.