விழுப்புரம்:திண்டிவனம் அருகே சரக்கு வேனில் 1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்துவதாக விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையிலான போலீசார் நெடிமோழியனுார் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 50 கிலோ எடையுள்ள 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.விசாரணையில், வேனை ஓட்டி வந்தவர், திண்டிவனம், வசந்தபுரத்தைச் சேர்ந்த பட்டாபிராமன் மகன் சேகர், 37; என்பதும், இவரும், திண்டிவனம், கீழ்அருங்குணத்தைச் சேர்ந்த ராதா என்பவரும் சேர்ந்து திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து, கோழி, மாட்டுத் தீவனத்திற்கு பயன்படுத்த கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, சேகரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1.50 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும், ராதாவை தேடி வருகின்றனர்.