திருப்பூர்:தென்னை விவசாயிகள், தேங்காய் விலை சரிவால் கண்ணீர் வடிக்கின்றனர். 'கொப்பரைக்கு பதிலாக நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வலுத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், தென்னை சாகுபடி பரப்பு அதிகம். தேங்காய் விலைசரிவால், விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தேங்காய் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில், கொப்பரை சந்தை விலை முக்கிய பங்கு வகிக்கிறது. கொப்பரை விலை வெளி மார்க்கெட்டில், கிலோ, 81 -- 83 ரூபாயாக சரிந்துள்ளது.கடந்தாண்டு இதே பருவத்தில், தோப்பில் ஒரு தேங்காய், 16 -- 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவால், ஒரு தேங்காய், 8 -- 10 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.தேங்காய் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, 105.90 ரூபாய் நிர்ணயித்து, அரசு கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காயை தோண்டி எடுத்து, உலர வைத்து கொப்பரையாக்கி, விற்பனை செய்ய வேண்டும். அதற்கு, ஆட்கள், உலர்களம் வசதிகள் அனைத்து விவசாயிகளிடமும் இல்லை.சிறு, குறு விவசாயிகளால் இந்த மதிப்புக்கூட்டு நடவடிக்கையை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமில்லை. பெரிய விவசாயிகளும், விவசாயிகள் என்ற அடையாளத்தில் உள்ள வியாபாரிகள் மட்டுமே பயனடைகின்றனர்.இதற்கு தீர்வாக, கொப்பரைக்கு பதிலாக, நேரடியாக தேங்காயை அரசு கொள்முதல் செய்து, நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, கொப்பரையாக மாற்றி இருப்பு வைத்து விற்கலாம்; ஒரு டன் உரித்த தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, 30 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்க வேண்டும் என்கின்றனர்.நடைமுறையில் மிகவும் பலனளிக்கும் இத் திட்டத்தை அரசு செயல்படுத்தும் போது, விவசாயிகள் பயனடைவது மட்டுமின்றி, தேங்காய் எண்ணெயில் கலப்படம், தேங்காய் மற்றும் கொப்பரை சந்தையில் 'சிண்டிகேட்' ஆதிக்கம் ஒழிக்கப்படும். ஆண்டு முழுக்க விவசாயிகளுக்கு சீரான விலை கிடைக்கும். இதை, எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.'ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக சத்துகள் நிரம்பிய தேங்காய் எண்ணெயை வினியோகிக்க வேண்டும். பாமாயிலுக்கு வழங்கும் மானியத்தை தேங்காய் எண்ணெய்க்கு வழங்க வேண்டும். இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் நிலையில், அவற்றுள் சமையல் எண்ணெயாக தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும்' என்ற யோசனைகளையும் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.