சென்னை : பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று சென்னை கலைவாணர் அரங்கில் துவங்க உள்ளது. முன்னணி கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, வரும், 26ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.தமிழக பள்ளிக்கல்வி, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உட்பட அனைத்து வகை பாட திட்டத்திலும் பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான ஆலோசனை வழங்கும் நோக்கில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டு தோறும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று துவங்க உள்ளது.'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த ஆண்டின் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பிரதான 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. வேல்ஸ் நிகர்நிலை பல்கலை, டாட் ஸ்கூல் ஆப் டிசைன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஷிவ் நாடார் பல்கலை மற்றும் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்குகின்றன.மூன்று நாட்கள் நடக்க உள்ள இந்த நிகழ்வில், ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில், உயர்கல்வியின் பல்வேறு பாட பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
பங்கேற்கும் கல்வியாளர்கள்
மருத்துவம், இன்ஜினியரிங், கலை, சட்டம், வேளாண்மை, கணினி அறிவியல், வணிகம், மல்டி மீடியா என, அனைத்து வகை பாடங்கள் குறித்தும், வல்லுனர்களின் ஆலோசனைகளை பெறலாம். கைநிறைய சம்பளம் தரும் வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எவை; எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் பாட பிரிவுகள் என்ன; உயர்கல்வி படிக்கும்போதே, வளர்க்க வேண்டிய திறன்கள்; கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து, நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். வங்கிகளில் கல்வி கடன் பெறும் முறை குறித்தும், தெரிந்து கொள்ளலாம்.ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ஆடிட்டர் சேகர், கல்வி ஆலோசகர் பிரேமானந்த் சேதுராஜன், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் சி.இ.ஓ., சுந்தரராமன் கிருஷ்ணமூர்த்தி, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆலோசனை வழங்க உள்ளனர்.
கல்லுாரிகளின்
அரங்குகள்
நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஒவ்வொரு கல்லுாரிக்கும் நேரில் சென்று பெற வேண்டிய தகவல்களை, ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அரங்குகளில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு அரங்கிலும், உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்கள் நிறுவனத்தில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அதற்கான வேலைவாய்ப்புகள், விண்ணப்பங்கள், கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை நடைமுறை உள்ளிட்டவை குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், இன்று முதல் வரும், 26ம் தேதி வரை, வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. மூன்று நாட்களும், காலை, 10:00 மணி முதல் மாலை, 6:30 வரையிலும், நிகழ்ச்சி நடக்கும். நிகழ்ச்சியில் பயன் பெற வரும், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும், நுழைவு கட்டணம் எதுவும் இன்றி, இலவசமாக அனுமதிக்கப்படுவர்.-
காலை மற்றும் மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து பெற, www.kalvimalar.com/ என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், தங்களின் பெயர் மற்றும் மாவட்ட விபரங்களுடன், மாணவர்கள் பதிவு செய்யலாம்.