கோவை;பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி ஆலோசனை வழங்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் துவங்குகிறது.பிளஸ் 2 வகுப்புக்குள் நுழைந்து விட்டாலே எதிர்காலம் குறித்த கேள்வி ஒவ்வொரு பெற்றோர் மற்றும் மாணவரின் கண் முன்னும் வந்து செல்லும். அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வியை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.
நிகழ்ச்சியில், காலை, மதியம் இரு வேளைகளிலும், பல்வேறு தலைப்புகளில், நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர். வேலை பெற வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து சுஜித்குமார், 'கோர் இன்ஜினியரிங்' குறித்து கருப்புசாமி, குடிமைப்பணிகள் குறித்து ஜாங்கிட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் குறித்து ஜானட், பாதுகாப்பு களத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவேக் ராம்குமார், சைபர் செக்யூரிட்டி குறித்து சையது முகமது, 'சிகரம் தொடு' என்ற தலைப்பில் வேலுமணி, மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை குறித்து சுரேஷ்குமார் ஆகிய நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். மருத்துவ அறிவியல் குறித்து சுகுமாரன், பட்டயக் கணக்காளர், வணிகவியலின் எதிர்காலம் குறித்து சேகர், கலை பாடப்பிரிவு குறித்து மரியா ஜோசபீன், தொழில்சார் கவுன்சிலிங் குறித்து காந்தி, அரசு வேலைவாய்ப்புகள் குறித்து நித்யா, அறிவியல் குறித்து சித்ரா, முன்னணி படிப்புகள் குறித்து ரமேஷ் பிரபா ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர். மின்சார வாகனம், தானியங்கி மயம் குறித்து, செந்தில்ராஜா, கல்வி கடன்கள் குறித்து விருதாசலம், நுழைவுத்தேர்வு மற்றும் கல்வி உதவித்தொகை குறித்து, நெடுஞ்செழியன், அனிமேஷன் மற்றும் மீடியா குறித்து கிஷோர்குமார் ஆகியோர் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெற தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
ஒரே இடம்;
ஓராயிரம் தகவல்
பல்வேறு முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, ரோபோட்டிக்ஸ், வேலைவாய்ப்பு பெற தேவையான திறன்கள், தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்களை, ஒரே இடத்தில் அறியலாம். கல்வி நிறுவனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்கள், பெற்றோருக்கு, கல்வி நிறுவன பிரதிநிதிகள் விளக்கம் அளிப்பர்.
கரம் கோர்க்கும் நிறுவனங்கள்
'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகிறது. முக்கிய பங்களிப்பாளராக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'ஸ்பான்சர்'களாக, கே.எம்.சி.எச்., அண்டு டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், குமரகுரு லிபரல் கலை, அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி, எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்கள் ஆகியவை, நிகழ்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
கோவை அவிநாசி ரோடு கொடிசியா நுழைவுவாயிலில் இருந்து, 'கொடிசியா' அரங்கம் வரை மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் www.kalvimalar.com என்ற இணையதளம், 91505 74441 என்ற 'வாட்ஸ் அப்' எண் வழியாகவும் பெயர் மற்றும் விபரங்களுடன் பதிவு செய்யலாம்.