பேரறிவாளன் விடுதலை குறித்து காங்., தலைவர்கள் கருத்தை கேலி செய்து, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் கணவர், பேஸ்புக்கில் காங்கிரஸாரை கடுமையாக சாடியுள்ளார்.
தி.மு.க., துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன். பேரறிவாளன் விடுதலைக்கு காங்., தலைவர்கள் அழகிரி உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகேயுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் வீட்டுக்கு வந்த பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாளுக்கு திருமணச்சீர் போன்ற பொருட்களை வழங்கினர்.
இவை தொடர்பாக, ஜெகதீசன் தனது பேஸ்புக்கில், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தயாராகும் சகுனங்கள் கண்முன்!' என கருத்து தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து, 'பேரறிவாளன் மற்றும் விடுதலை புலிகள் பற்றி தி.மு.க.,வுக்கு, உடன்பாடற்ற மாற்று கருத்துக்களை சொல்லும் அழகிரி போன்றோரின் மாற்று கருத்துக்களுக்கு பதிலிடுவதை தவிருங்கள்.
அது அவர்களது சர்வைவலுக்கான பதிவுகள். ஒரு கை ஓசை அது. கீழ்பவானி பிரச்னை, காளிங்கராயன் பிரச்னையில் தெளிவற்ற நோக்கு அவர்களுடையது.
அன்று இளங்கோ; இன்று அழகிரி; கார்த்திக் சிதம்பரம்; நாளை எவரோ?
எல்லாம் தனக்குத்தான் தெரியும் என நுனிப்புல் மேய்ந்து சுய புராணம் பாடிக்கொண்டே காலம் தள்ளட்டும் என விட்டுவிடுங்கள்.
கிச்சத்தில் ஒட்டாத சட்டை; புட்டத்தில் ஒட்டாத வேஷ்டி; மக்களிடம் ஒட்டாத அந்நியம். மக்கள் உணர்வுக்கு நியாயத்துக்கு குரல் கொடுக்கும் வலிவின்மை. பதவியில் இருப்போருக்கு பல்லக்கு துாக்கும் ஆண்மை, அவர்களின் தனிச்சொத்து என்பது உட்பட பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது தளத்திலும், பகிரப்பட்ட தளங்களிலும், காங்கிரஸ் கட்சியினர், 'சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிக்குள் வரக்காரணமான முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் துவங்கி, பல சர்ச்சையான கருத்துக்களையும்,
கூட்டணி உடைவது பற்றியும்' பகிர்ந்து வருகின்றனர்.