அதன்படி, செவ்வாய்க்கிழமையான நேற்று, 100க்கும் மேற்பட்ட உள்ளூர் பக்தர்கள், காலை 6:00 மணி சிறப்பு கட்டண வழியில் இலவசமாக சென்று மூலவரை தரிசிக்க காத்திருந்தனர்.ஆனால், அவர்களை அனுமதிக்காத கோவில் ஊழியர்கள் சிலர், கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்லும்படி கூறியதுடன், இது அதிகாரியின் உத்தரவு என்றும் கூறினர்.
இதனால், பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதற்கிடையே, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் வழியாக, திருத்தணியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், மூலவரை தரிசிக்க சென்றார். அப்போது, அங்கிருந்த கோவில் ஊழியர் புருஷோத்தமன் என்பவர், அவரை தடுத்து நிறுத்தியதுடன், பணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்லும்படி கூறினார்.இதனால், லோகநாதனுக்கும், ஊழியர் புருஷோத்தமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென லோகநாதன், ஊழியர் புருஷோத்தமனை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்த ஊழியர்கள், லோகநாதனை சமரசம் செய்து வெளியே அழைத்து வந்து, அவரை தாக்கினர்.இதில், லோகநாதனுக்கு கையில் காயம் ஏற்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து புருஷோத்தமன் அளித்த புகாரின் மீது, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மேலும், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, அரசு மருத்துவ மனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் லோகநாதனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.திருத்தணி பொறுப்பு டி.எஸ்.பி., அனுமந்தன், மலைக்கோவில் வளாகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.
முருகன் கோவிலில் சிறப்பு தரிசன வழியில், உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படாததை அறிந்து, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் மலைக்கோவிலுக்கு சென்று, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.அப்போது ஊழியர்கள், 'இது கோவில் இணை ஆணையர் உத்தரவு' எனக் கூறியதை தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களிடம் சமரசம் பேசினார்.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்த வாரம் முதல் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.